google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Recipes and Cooking Tips: September 2009

Tuesday, September 22, 2009

Deepavali laddu / தீபாவளி லட்டு

இது எல்லோருக்கும் பிடித்த அருமையான சுவையான ஸ்வீட் ஆகும்.

தேவையான பொருட்கள்:


  • கடலை மாவு: இரண்டு கப்
  • சீனி: ஒன்றரை கப்
  • முந்திரிப் பருப்பு: பத்து
  • கிஸ்மிஸ் என்னும் உலர் திராட்சை: பத்து
  • ஏலக்காய்ப் பொடி: கால் தேக்கரண்டி
  • சமையல் சோடா: ஒரு சிட்டிகை
  • நெய்: இரண்டு தேக்கரண்டி
  • எண்ணெய்: அரை லிட்டர்
  • கலர் (மஞ்சள்): ஒரு சிட்டிகை (விரும்பினால் மட்டும்)
  • உப்பு: ஒரு சிட்டிகை

செய்முறை:

  • கடலை மாவுடன் உப்பையும் சமையல் சோடாவையும் முக்கால் கப் தண்ணீரையும் சேர்த்து, தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
  • இருப்புச்சட்டி என்ற வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, அரிகரண்டி உதவியுடன் மாவை ஊற்றி பூந்தி செய்து கொள்ளவும்.
  • மற்றொரு சட்டியில் மூன்று கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் சீனியையும் ஏலக்காய்ப் பொடியையும், தேவைப்பட்டால் கலரையும் போட்டு சீனி நன்கு கரையும் வரை கிண்டவும்.
  • பின்பு அதில் பூந்தியைப் போட்டுக் கிளரவும்.
  • அதன் மேல் நெய்யில் வறுபட்ட கிஸ்மிஸ்ஸையும் முந்திரியையும் போட்டு, சூடு ஆறியதும் மிக்சியில் லேசாக ஒரு நொடி அரைத்து, கையில் நெய்யைத் தடவிக் கொண்டு வேண்டிய சைசில் உருண்டை பிடிக்கவும்.

Monday, September 21, 2009

Deepavali medicine / Diwali lekiyam

தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து


தீபாவளியன்று நாம் பலவிதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகளைச் சாப்பிடுவோம். நம் வீட்டு பதார்த்தங்கள் மட்டும் அல்லாது சுற்றியுள்ள வீட்டுப் பதார்த்தங்களையும் சாப்பிட நேரும். இதற்காகவே அக்காலத்தில் தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து என்பதை ஒவ்வொரு வீட்டிலும் செய்வார்கள். இது அஜீரணத்தைப் போக்கி நல்ல செரிமானம் கொடுக்கும். அதிகாலையிலேயே ஒரு நெல்லிக்காய் அளவு இதைச் சாப்பிடக் கொடுப்பார்கள்.

தீபாவளி லேகியத்தைப் பலவிதங்களில் செய்வார்கள்.

மிகவும் சுருக்கமான முறை:

சுக்கை நன்கு பொடியாக்கி, சலித்து, அதில் வெல்லப் பொடி சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் கலந்து உருட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது சாப்பிடலாம்.



மற்ற முறைகள்:

தேவையான பொருட்கள்:
இஞ்சி: ஒரு துண்டு
மல்லி (தனியா): ஒரு கப்
சீரகம்: அரை கப்
நெய்: மூன்று தேக்கரண்டி
வெல்லம்: ஒரு கப்

செய்முறை:

மல்லி, சீரகம்,இஞ்சி இம்மூன்றையும் தண்ணீர் விட்டு மிக நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வெல்லத்தை சேர்த்துக் கொதிக்க விட்டு, நெய்யைச் சேர்த்து, நன்றாகக் கலக்கிக் கொண்டே இருக்கவும். நன்கு இறுகியவுடன் இறக்கி, பத்திரப்படுத்திக் கொள்ளவும். (சிறிது ஏலக்காய் பொடியை, கடைசியாகத் தூவியும் இறக்கலாம். சூடு ஆறிய பின்பு தேன் கலந்தும் சாப்பிடலாம்.) சித்தரத்தை, ஜாதிக்காய், அதிமதுரம், மிளகு, ஓமம், சுக்கு, கண்டந்திப்பிலி போன்றவற்றையும் அரைக்கும்போது சேர்த்தால் நல்ல பயன் உண்டு.